ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூர் தீயணைப்புத் துறையின் துரித நடவடிக்கையால் 32 தற்கொலை முயற்சிகள் முறியடிப்பு

ஷா ஆலம், மே 13- சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இவ்வாண்டு ஜனவரி தொடங்கி நேற்று வரை 32 தற்கொலை முயற்சிகளை முறியடித்துள்ளது.

இக்காலக்கட்டத்தில் தற்கொலை முயற்சி தொடர்பில் 38 அவசர அழைப்புகளை தமது துறை பெற்றதாக மாநில தீயணைப்புத் துறை இயக்குநர் நோராஸாம் காமீஸ் கூறினார்.

அவர்களில் அறுவரை தங்களால் காப்பாற்ற முடியாமல் போன நிலையில் அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அவர் தெரிவித்தார்.

தற்கொலை முயற்சி தொடர்பில் அதிக புகார்கள் கிடைப்பது தங்களுக்கு கவலையளிப்பதாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஏறக்குறைய ஒவ்வொரு வாரமும் இத்தகைய புகார்களை நாங்கள் பெறுகிறோம். காதல் தோல்வி, மன உளைச்சல், பணப் பிரச்சனை போன்றவை தற்கொலை முயற்சிக்கு காரணமாக உள்ளன என்றார் அவர்.

தற்கொலைக்கு முயன்றவர்களை சமாதானப்படுத்துவதற்காக அவர்களிடம் பேச்சு கொடுக்கும் போது இந்த விபரங்கள் எங்களுக்குத் தெரியவந்தன.  பெரும்பாலும் 20  முதல் 30 வயதுக்குட்பட்டவர்களே அதிகம் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநில தீயணைப்புத் துறையின் ஏற்பாட்டில் இன்று இங்கு நடைபெற்ற நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பின் போது செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.


Pengarang :