கோல லங்காட், மே 15- சிலாங்கூர் மாநில அரசு கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் இதுவரை இஸ்லாம் அல்லாத சமய அமைப்புகளுக்கு 6 கோடியே 94 லட்சம் வெள்ளியை மானியமாக வழங்கியுள்ளது.
இந்த மானியம் சட்டமன்றத்தின் வாயிலாக அல்லாமல் தேவையின் அடிப்படையில் வழங்கப்பட்டதாக லீமாஸ் எனப்படும் பௌத்த, கிறிஸ்துவ, இந்து, சீக்கிய மற்றும் தோ சமய விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் கூறினார்.
இந்த லீமாஸ் அமைப்பு இஸ்லாம் அல்லாத சமய அமைப்புகள் எதிர்நோக்கும் கட்டிடம், நிலம் உள்ளிட்டப் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதோடு ஒவ்வோரு சமய அமைப்புக்கும் நிதியுதவியும் வழங்குவதாக அவர் சொன்னார்.
வழிபாட்டுத் தலங்களை சீரமைப்பது, சமய நடவடிக்கைகளை மேற்கொள்வது மற்றும் விழாக்காலங்களின் போது சிறப்பு உதவிகளை வழங்குவது ஆகிய நோக்கங்களுக்கு இந்த மானியம் பயன்படுத்தப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
இங்குள்ள, ஜென்ஜாரோம் ஃபூங் குவாங் ஷான் டோங் ஸென் ஆலயத்தில் நேற்று நடைபெற்ற சிலாங்கூர் மாநில நிலையிலான விசாக தின நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.
மாநிலத்திலுள்ள மத ரீதியிலான மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மலேசிய புள்ளி விபரத்துறையிடமிருந்து இதற்கான தரவுகளை நாங்கள் பெறுகிறோம் என அவர் சொன்னார்.
இதன் அடிப்படையில் பௌத்த, தோ மற்றும் இதர சமயத்தினர் 60.47 விழுக்காடாகவும் இந்துக்கள் 28.75 விழுக்காடாகவும் கிறிஸ்துவர்கள் 9.42 விழுக்காடாகவும் சீக்கியர்கள் 1.36 விழுக்காடாகவும் உள்ளதாக அவர் மேலும குறிப்பிட்டார்.