ECONOMYMEDIA STATEMENT

கெமென்சோ ஹைட்ஸ் பகுதியில் புலியின் நடமாட்டம்? தவறான தகவல் பரப்பிய வங்காளதேசி கைது

கோலாலம்பூர், மே 22- தேசிய மிருகக்காட்சி சாலையிலிருந்து தப்பிய புலியை தாம் கண்டதாக பொய்யான தகவலைப் பரப்பிய சந்தேகத்தின் வங்காளதேசி ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

செல்லத்தக்க ஆவணங்களைக் கொண்டிராத அந்த 51 வயது ஆடவர் ஜாலான் டிரோப்பிகா செகெமன்சோ 1, கெமென்சே ஹைட்ஸ் எனுமிடத்திலுள்ள பாதுகாவலர் சாவடியில் நேற்றிரவு 7.00 மணியளவில் கைது செய்யப்பட்டதாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது பாரூக் இஷாம் கூறினார்.

அப்பகுதியில் புலியின் நடமாட்டம் இருப்பதாக பொய்யான தகவல் பரவியதற்கு அந்நபரே காரணமாக இருந்திருக்கலாம் என நம்பப்படுவதாக அவர் தெரிவித்தார்.

புலியின் நடமாட்டம் இருப்பதால்  கவனமுடன் இருக்கும்படி குடியிருப்பாளர்களை எச்சரிக்கும் குரல் பதிவு ஒன்றை வாட்ஸ்ஆப் புலனம் வழி பெற்றது தொடர்பில் ஆடவர் ஒருவரிடமிருந்து தாங்கள் புகாரைப் பெற்றதாக அவர்  சொன்னார்.

செல்லத்தக்க ஆவணங்கள் இன்றி நாட்டில் தங்கியிருந்ததற்காக அந்நவர் குடிநுழைவுத் துறை சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதுதவிர, பொய்யான தகவலை பரப்பியது தொடர்பில் தொடர்பு மற்றும் பல்லுடக சட்டத்தின 233 வது பிரிவின் கீழும் அந்நபருக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்படுகிறது என்றார் அவர்.

கெமென்சோ ஹைட்ஸ் பகுதியில் புலியின் நடமாட்டம் இருப்பதாக சமூக ஊடகங்களில் நேற்று வெளியான செய்தி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

எனினும், தங்கள் பாதுகாப்பிலிருந்து எந்த புலியும் தப்பவில்லை என்று தேசிய மிருகக்காட்சி சாலை நிர்வாகம் கூறியது.


Pengarang :