கிள்ளான், மே 22- சமூக நலத் திட்டத்தின் புதிய வடிவத்தை அறிமுகப்படுத்துவதற்காக வரும் ஜூலை மாதம் மாநில அரசு அனைத்து சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு பயணம் மேற்கொள்ளும்.
அமலாக்கம் செய்யப்படும் திட்டங்கள் தொடர்பில் மேலும் விரிவான அளவில் விளக்கங்கள் இப்பயணத்தின் போது பொது மக்களுக்கு வழங்கப்படும் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
மாநில அரசின் திட்டங்கள் தொடர்பில் புதிய விளக்கம், புதிய விதிகள் மற்றும் புதிய வடிவம் மற்றும் புதிய அணுகுமுறை குறித்து மக்களுக்கு விளக்கமளிப்பதற்காக ஒவ்வொரு மாவட்டம் மற்றும் நாடாளுமன்றத் தொகுதிக்கும் ஜூலை மாதம் வருகை புரிவேன் என்றார் அவர்.
நாங்கள் திட்டத்தின் பெயரை மட்டும் மாற்றவில்லை. நமக்கிடையிலான அன்பின் உணர்வுகளையும் வெளிப்படுத்தவும் விரும்புகிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.
இங்குள்ள பண்டமாரான் விளையாட்டு மையத் தொகுதியில் நேற்று நடைபெற்ற மாநில அரசின் நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.
பரிவு மற்றும் அக்கறையின் அடிப்படையில் மட்டும் சமூல நலப்பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.மாறாக, மக்களிடம் மாநில அரசு கொண்டுள்ள அன்பை புலப்படுத்தும் விதமாகவும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் மேலும் சொன்னார்.
சமூகத்தை உருவாக்கக்கூடிய மற்றும் பரிவுமிக்க மாநிலமாக அடையாளப்படுத்தக் கூடிய ஒரு தளமாகவும் இந்த சமூக நலத் திட்டங்கள் அமைக்கின்றன என்று அவர் கூறினார்.
தற்போது அமலில் இருந்து வரும் பெடுலி ராக்யாட் திட்டத்திற்கு பதிலாக இல்திஸாம் சிலாங்கூர் பென்யாயாங் (ஐ.பி.எஸ்.) திட்டத்தை மாநில அரசு அமல்படுத்தவுள்ளதாக அமிருடின் கடந்த 17 ஆம் தேதி கூறியிருந்தார்.