ECONOMYNATIONALSUKANKINI

பிரீமியர் லீக் போட்டி-  கிளந்தானிடம்  சிலாங்கூர் 2 அணி  தோல்வி

ஷா ஆலம், மே 23–  இங்குள்ள யு.ஐ.டி.எம். அரங்கில் நேற்றிரவு நடைபெற்ற பிரீமியர் லீக் போட்டியில் சிலாங்கூர் எப்.சி. 2 அணி கிளந்தான் எப்.சி.யிடம் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டது.

பிரீமியர் லீக் போட்டியில் முன்னிலை வகிக்கும் கிளந்தான் எப்.சி. குழுவுக்கு இந்த தவணையில் கிடைத்த ஏழாவது வெற்றி இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியின் முதல் பாதி ஆட்டத்தில் இரு குழுக்களும் கோல் ஏதும் போடாமல் சமநிலையில் ஆட்டத்தை முடித்துக் கொண்ட நிலையில் இரண்டாம் பாதி ஆட்டத்தின் 61வது நிமிடத்தில் ரிஷால் ஜம்ரி யாஹ்யா மூலம் கிளந்தான் குழு தனது வெற்றிக் கோலை புகுத்தியது.

இவ்வாட்டம்  முழுவதும் இரு குழுக்களும் ஒன்றுக்கொன்று சளைக்காமல் அதிரத் தாக்குதல்களை தொடர்ந்து நிகழ்த்திய வண்ணம் இருந்தன. எனினும், அக்குழுக்களின் முயற்சிகள் யாவும் கோலை பெற்றுத் தருவதில் தோல்வியைத் தழுவின.

இவ்வாட்டத்தில் சிலாங்கூர் 2 அணியை அதன் சொந்த மாநிலத்திலேயே 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கொண்டதன் மூலம் கிளந்தான் அணி முழுமையாக மூன்று புள்ளிகளைப் பெற்றுள்ளது.


Pengarang :