கோத்தா பாரு, மே 24– கிளந்தான் மாநிலத்தில் நிகழ்ந்த விரைவு பஸ்கள் சம்பந்தப்பட்ட விபத்துகளுக்கு அதன் ஓட்டுநர்கள் வேக வரம்பை மீறியதே காரணம் என்று மாநில சாலை போக்குவரத்து அமலாக்க மற்றும் விசாரணைப் பிரிவுத் தலைவர் சூப்பிரண்டெண்டன் சுஹாய்மி ஜுசோ கூறினார்.
கடந்த ஜனவரி முதல் தேதி தொடங்கி மே 10 ஆம் தேதி வரை விரைவு பஸ்கள் சம்பந்தப்பட்ட 12 குற்றங்கள் அடையாளம் காணப்பட்டதாக அவர் சொன்னார்.
நேரான மற்றும் வாகனங்கள் குறைவாக உள்ள சாலைகளில் ஓட்டுநர்கள் அதி வேகத்தில் பேருந்துகளைச் செலுத்துகின்றனர். அதிக வேகத்தில் வாகனத்தை செலுத்துவது கடுமையான குற்றமாக கருதப்படுகிறது. காரணம், இதனால் சம்பந்தப்பட்ட ஓட்டுநர்கள் மட்டுமின்றி பேருந்தில் பயணம் செய்வோரும் ஆபத்தை எதிர்நோக்குகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.
ஒரு ஓட்டுநர் ஒரே குற்றத்தை அதாவது வேக வரம்பை மீறி பேருந்தை செலுத்தும் குற்றத்தை எழு முறை புரிந்துள்ளது நாங்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இன்று இங்கு சானி எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் விவேகத்துடன் பேருந்தை செலுத்தும் இயக்கத்தில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைச் சொன்னார்.
கடந்தாண்டில் வேக வரம்பை மீறியது, முறையான வாகனமோட்டும் அனுமதியைக் கொண்டிராதது, காலாதியான வாகனமோட்டும் லைசென்சை கொண்டிருந்தது, இரட்டைக் கோடுகளில் முந்திச் சென்றது உள்ளிட்ட குற்றங்களைப் புரிந்தது தொடர்பில் 33 குற்றப்பதிவுகள் வெளியிடப்பட்டன என்றார் அவர்.