ஷா ஆலம், மே 25– இன்று காலை 11.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை பெய் அடை மழை காரணமாக கிசிஞ்சான் தொகுதியின் பல பகுதிகளில் அரை மீட்டர் உயரத்திற்கு வெள்ளம் ஏற்பட்டது.
இந்த வெள்ளத்தில் ஆயிரக்கணக்கான வீடுகளோடு போலீஸ் நிலையம், பொது மண்டம் ஆகியவையும் பாதிக்கப்பட்டதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இங் சுயி லிம் கூறினார்.
இவ்வளவு மோசமான வெள்ளப் பேரிடர் இப்பகுதியில் இதற்கு முன்னர் ஏற்பட்டதில்லை. வடிகால் மற்றும் நீர் பாசனத் துறையினர் நீர் தடுப்பு மதகுகளைத் திறந்து விட்டப் பின்னரே வெள்ள நீர் வடியத் தொடங்கியது என அவர் தெரிவித்தார்.
எனினும், மாலை 6.00 மணி வரை மழை தொடர்ந்து பெய்தவண்ணம் இருந்த காரணத்தால் தாங்கள் முழு விழிப்பு நிலையில் இருந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதுவரை யாரும் தற்காலிக துயர் துடைப்பு மையங்களில் அடைக்கலம் நாடவில்லை எனக் கூறிய அவர், நிலைமை மோசமாகும் பட்சத்தில் துயர் துடைப்பு மையங்களைத் திறப்பதற்கு ஏதவாக தாங்கள் நிலையில் உள்ளதாக சொன்னார்.
இந்த வெள்ளம் காரணமாக அப்பகுதி மக்கள் சிலரின் கார்களும் பாதிப்புக்குள்ளானதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கிள்ளான் பள்ளத்தாக்கில் இன்று காலை முதல் பெய்து வரும் அடை மழை காரணமாக தலைநகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது.