ECONOMYSELANGOR

அனிஸ் திட்டத்திற்கு நாளைக்குள் விண்ணப்பம் செய்வீர்- மாற்றுத் திறனாளி பிள்ளைகளின் பெற்றோருக்கு வேண்டுகோள்

ஷா ஆலம், மே 30- இவ்வாண்டிற்கான சிலாங்கூர் பிரத்தியேக சிறார் சிறப்பு உதவித் திட்டத்திற்கு (அனிஸ்) விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது.

மாற்றுத் திறனாளி பிள்ளைகளின் பெற்றோர் www.anisselangor.com  என்ற அகப்பக்கம் வாயிலாக இந்த உதவித் திட்டத்திற்கு விண்ணப்பம் செய்யலாம் என்று அனிஸ் தனது பேஸ்புக் பதிவில் கூறியது.

ஓரு குடும்பத்திற்கு கூடுதல் பட்சம் 5,000 வெள்ளி வரை ஒரு முறை மட்டுமே வழங்க வகை செய்யும் இந்த உதவித் திட்டத்திற்கு 18 வயதுக்கும் கீழ்ப்பட்ட மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பம் செய்யலாம்.

மாற்றுத் திறனாளி சிறார்களுக்கு ஏற்படக்கூடிய சிகிச்சை, புனர்வாழ்வு பயிற்சி, கல்வி, சத்துணவு, மருந்துகள் உள்ளிட்ட வாழ்க்கை செலவினம் ஆகியவற்றால் ஏற்படும் சுமையைக் குறைப்பதில் இந்த நிதியுதவி ஓரளவு துணை புரியும் என அனிஸ் அமைப்பு நம்பிக்கைத் தெரிவித்தது.

மாற்றுத் திறனாளி சிறார்கள் மறுவாழ்வு பெறுவதற்கு உதவிக்கூடிய உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களை வாங்குவதற்கும் இந்த உதவி பேருதவி புரியும் என்றும் அது கூறியது.

இந்த உதவித் திட்டத்திற்கான விண்ணப்பம் இம்மாதம் 17 ஆம் தேதி திறக்கப்பட்டதிலிருந்து இதுவரை 2,716 மனுக்கள் கிடைத்துள்ளதாக சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

இந்த உதவித் திட்டம் தொடர்பில் மேல் விபரங்கள் பெற விரும்புவோர் 03-55453170 அல்லது 03-54818800 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


Pengarang :