ECONOMYSELANGOR

வர்த்தகப் பகுதிகளில் வாகன நிறுத்துமிடங்களில் நேரக் கட்டுப்பாடு- அமலாக்கத்தை ஒத்தி வைத்தது எம்.பி.எஸ்.ஜே.

ஷா ஆலம், ஜூன் 3– இம்மாதம் முதல் தேதி தொடங்கி வர்த்தகப் பகுதிகளில் உள்ள வாகன நிறுத்தங்களில் இரண்டு மணி நேரத்திற்கு மட்டுமே வாகனங்களை நிறுத்த வகை புதிய விதிமுறையின் அமலாக்கத்தை சுபாங் ஜெயா மாநகர் மன்றம் ஒத்தி வைத்துள்ளது.

சுபாங் ஜெயா மாநகர் மன்றத்தின் 2022 ஆம் ஆண்டிற்கான சாலை போக்குவரத்து விதியில் (வாகன நிறுத்துமிட ஒதுக்கீடு) செய்யப்பட்ட திருத்தங்களை சிலாங்கூர் அரசு இன்னும் அங்கீகரித்து ஆர்ஜிதம் செய்யாததே இதற்கு காரணம் என்று மாநகர் மன்றத்தின் வர்த்தக மற்றும் தொடர்பு வியூக இயக்குநர் முகமது அஸ்லி மிஸ்வான் கூறினார்.

இந்த இரண்டு மணி நேர கார் நிறுத்தக் கட்டுப்பாடு கூடிய விரைவில் அமல்படுத்தப்பட்டால் பரபரப்பு மிகுந்த பகுதிகளில் காணப்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் இரட்டை பார்க்கிங் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியும் என அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

மாநகரிலுள்ள 10,027 கார் நிறுத்துமிடங்களில்  குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள 1,922 இடங்களை இந்நோக்கத்திற்காக ஆர்ஜிதம் செய்ய மாநகர் மன்றம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த இரண்டு மணி நேர கார் நிறுத்தக் கட்டுப்பாடு விதிக்கப்படும் பகுதிகளில் மாநகர் மன்றம் அடிப்படை வசதிகளை மேம்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்நோக்கத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் உள்ள கார் நிறுத்தங்களிர் வர்ணம் பூசப்பட்டுள்ளதோடு, இது தொடர்பான அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன என்று அவர் மேலும் தெரிவித்தார்.


Pengarang :