ஷா ஆலம், ஜூன் 4- செலங்கா செயலி வாயிலாக இலவச மருத்துவ பரிசோதனைக்கு விண்ணப்பம் செய்யும்படி பொது மக்களை சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டுள்ளார்.
இலவச மருத்துவப் பரிசோதனையை நோக்கமாக கொண்டு கடந்த மாதம் 22 ஆம் தேதி தொடங்கப்பட்ட சிலாங்கூர் சாரிங் திட்டம் இன்று உலு பெர்ணம் தொகுதியிலும் நாளை சிகிஞ்சான் தொகுதியிலும் நடைபெறவுள்ளதாக அவர் சொன்னார்.
இவ்வார இறுதியில் உலு பெர்ணம் மற்றும் சிகிஞ்சான் தொகுதிகளில் இலவச மருத்துவப் பரிசோதனை நடைபெறுகிறது. இருதய நோய், சிறுநீரக நோய், புற்றுநோய் உள்ளிட்ட நோய்களை முன்கூட்டியே கண்டறிவதற்கான இந்த திட்டத்திற்கு செலங்கா செயலி வாயிலாக முன்பு பதிவு செய்து கொள்ளுமாறு பொதுமக்களைக் கேட்டுக் கொள்கிறோம் என்றார் அவர்.
சுமார் 34 லட்சம் வெள்ளி செலவில் மாநில அரசு ஏற்பாடு செய்துள்ள இந்த மருத்துவ பரிசோதனைத் திட்டத்தின் வழி 39,000 பேர் வரை பயன்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பரிசோதனையில் பொதுவான மருத்துவ சோதனை, மார்பக புற்றுநோய் சோதனை, கர்ப்பப்ப்பை வாய்ப் புற்றுநோய் சோதனை, புரோஸ்ட்ரேட் சோதனை ஆகியவை சோதனைகள் மேற்கொள்ளப்படும்.