ANTARABANGSAECONOMYTOURISM

கோலாலம்பூர் அனைத்துலக புத்தக விழாவுக்கு சிலாங்கூர் அரசு வெ. 300,000 நிதியுதவி

கோலாலம்பூர், ஜூன் 6- கோலாலம்பூர் அனைத்துலக புத்தக விழா 2022 நிகழ்வுக்கு ஆதரவு தரும் விதமாக சிலாங்கூர் அரசு 300,000 வெள்ளி நிதியுதவி வழங்கியுள்ளது.

அந்த புத்தக விழாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிலாங்கூர் அரசின் கண்காட்சிக் கூடமான பெவிலியன் சிலாங்கூரில் பங்கு பெற்றுள்ள 19 அரசு நிறுவனங்கள் மூலம் அந்த நிதி திரட்டப்பட்டதாக சிலாங்கூர் பொது நூலக கழகத்தின் இயக்குநர் டத்தின் படுக்கா மஸ்தூரா முகமது கூறினார்.

இந்த புத்தக விழாவுக்கான உபசரணை மாநிலமாகவும் ஏற்பாட்டாளர்களில் ஒருவராகவும் நாம் திகழ்கிறோம். ஆகவே, நமது அரசு நிறுவனங்கள் தத்தம் சேவையை மக்களுக்கு விரிவாக விளக்குவதற்கு ஏதுவாக பரந்த இடத்தை ஏற்பாட்டாளர்கள் நமக்கு வழங்கியுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

இந்த புத்தக விழா நடைபெற்று வரும் கோலாலம்பூர் அனைத்துலக வாணிக மையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மாநில அரசின் நிதிக்கான மாதிரி காசோலையை சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது ஜவாவி அகமது முக்னி புத்தக விழாவின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் முகமது காயிர் ஙகாடிரோனிடம் ஒப்படைத்தார்.

பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப், கூட்டரசு பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ சஹிடான் காசிம், கல்வியமைச்சர் டாக்டர் ராட்ஸி ஜிடின் ஆகியோரும் இந்நிகழ்வின் போது உடனிருந்தனர்.


Pengarang :