ECONOMYSELANGOR

வார இறுதியில் ஷா ஆலமில் வேலை வாய்ப்புச் சந்தை- 100 நிறுவனங்கள் பங்கேற்பு

ஷா ஆலம், ஜூன் 9– “கார்னிவெல் கெர்ஜாயா மெகா“ எனப்படும் மாபெரும் வேலை வாய்ப்புச் சந்தை இங்குள்ள ஷா ஆலம் மாநகர் மன்ற மாநாட்டு அரங்கில் வரும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறுகிறது.

சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டிலான இந்த வேலை வாய்ப்புச் சந்தை காலை 9.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும். இந்த வேலை வாய்ப்புச் சந்தையில் பங்கேற்கும் சுமார் 100 க்கும் மேற்பட்ட முதலாளிகள் 20,000 வேலை வாய்ப்புகளை வழங்குகின்றனர்.

இந்த வேலை வாய்ப்புச் சந்தையில் கும்புலான் பெராங்சாங், டைகின் மலேசியா சென்.பெர்ஹாட், டிஎச்எல் எக்ஸ்பிரஸ், டிஆர்பி ஹைக்கோம், ஜயண்ட் மலேசியா, மலாயான் பேங்கிங் பெர்ஹாட் உள்ளிட்ட நிறுவனங்கள் பங்கு கொள்கின்றன.

மீடியா பிரிமா டிஜிட்டல், புரோட்டோன், பெரசாரானா மலேசியா பெர்ஹாட், ஷோப்பி மலேசியா, ஸ்போர்ட் டைரைக்ட் சென். பெர்ஹாட், டோயோட்டா ஆட்டோ போடி மலேசியா பெர்ஹாட் ஆகியவையும் வேலை வாய்ப்பினை வழங்கும் இதர நிறுவனங்களாகும்.

மாநிலத்தில் வேலையில்லாதோர் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் இந்த வேலை வாய்ப்புச் சந்தை நடத்தப்படுவதாக இளம் தலைமுறையினர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது கைருடின் ஓத்மான் கூறினார்.

கோவிட்-19 நோய்த் தொற்றுப் பரவல் காரணமாக கடந்த ஈராண்டுகளாக இயங்கலை மற்றும் பொது மக்களின் நேரடி பங்கேற்புடன்  நடைபெற்ற இந்த சந்தை இம்முறை பெரிய அளவில் நடத்தப்படுவதாக அவர் சொன்னார்.

இந்த வேலை வாய்ப்புச் சந்தை தொடர்பான மேல் விபரங்களுக்கு www.selangorJobportel.com.my  என்ற அகப்பக்கத்தை நாடலாம்.


Pengarang :