ECONOMYSELANGOR

இந்த சனி, ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் மெகா வேலை வாய்ப்பு கார்னிவலில் 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன

ஷா ஆலம், ஜூன் 10: சிலாங்கூர் அரசாங்கம் ஜூன் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் ஷா ஆலம் சிட்டி கவுன்சில் (எம்பிஎஸ்ஏ) கன்வென்ஷன் சென்டரில் மெகா வேலை வாய்ப்பு கார்னிவலை நடத்துகிறது.

20,000 வேலை வாய்ப்புகளை வழங்கும் இத்திட்டத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் வகையில் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும்.

இந்த வேலை வாய்ப்புச் சந்தையில் கும்புலான் பெராங்சாங், டைகின் மலேசியா சென்.பெர்ஹாட், டிஎச்எல் எக்ஸ்பிரஸ், டிஆர்பி ஹைக்கோம் , ஜயண்ட் மலேசியா, மலாயான் பேங்கிங் பெர்ஹாட் உள்ளிட்ட நிறுவனங்கள் பங்கு கொள்கின்றன.

மீடியா பிரிமா டிஜிட்டல், புரோட்டோன், பெரசாரானா மலேசியா பெர்ஹாட், ஷோப்பி மலேசியா, ஸ்போர்ட் டைரைக்ட் சென். பெர்ஹாட், டோயோட்டா ஆட்டோ போடி மலேசியா பெர்ஹாட் ஆகியவையும் வேலை வாய்ப்பினை வழங்கும் இதர நிறுவனங்களாகும்.

2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சிலாங்கூரில் வேலையின்மை விகிதத்தை 3.2 விழுக்காடாகக் குறைக்கும் நோக்கில் இந்த தொழில் கார்னிவல் நடத்தப்படுவதாக இளம் தலைமுறை மேம்பாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது கைருடின் ஓத்மான் கூறினார்.

கோவிட்-19 நோய்த் தொற்றுப் பரவல் காரணமாக கடந்த ஈராண்டுகளாக இயங்கலை மற்றும் பொது மக்களின் நேரடி பங்கேற்புடன்  நடைபெற்ற இந்த கார்னிவல் இம்முறை பெரிய அளவில் நடத்தப்படுவதாக அவர் சொன்னார்.

மேலும் தகவல்களைப் பெற விரும்புவோர், www.SelangorJobportal.com.my என்ற அகப்பக்கத்தை நாடலாம்.


Pengarang :