புத்ரா ஜெயா, ஜூன் 10- சவூதி அரேபியாவின் முஸ்டாலிஃபா பகுதியில் நேற்று 15 மலேசியர்கள் பயணம் செய்த தொழிற்சாலை பஸ் ஒன்று விபத்தில் சிக்கியதை வெளியுறவு அமைச்சு உறுதி செய்தது.
அந்த மலேசியர்கள் மெக்காவில் இரயில் தண்டவாளத் திட்டத்தை மேற்கொள்ளும் கட்டுமான நிறுவனம் ஒன்றின் பணியாளர்கள் என்று விஸ்மா புத்ரா இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.
விபத்தில் சிக்கிய அனைவரும் அன் நுர் மருத்துவமனை மற்றும் மெக்காவிலுள்ள மன்னர் பைசார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டதாக அது மேலும் தெரிவித்தது.
விபத்தில் சிக்கியர்களில் இருவர் எலும்பு முறிவு உள்பட கடுமையான காயங்களுக்குள்ளாகினர். லேசான காயங்களுக்குள்ளான மற்ற தொழிலாளர்கள் சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்து தொடர்பில் சவூதி அரசாங்கம் மேல் விசாரணை நடத்தி வருவதாகவும் விஸ்மா புத்ரா தெரிவித்தது.