ஷா ஆலம், ஜூன் 18 - "ஜோப்கேர் சிலாங்கூர்" வேலை வாய்ப்பு பயணத் தொடர் பந்திங் பாருவில் உள்ள கோல லங்காட் நகராண்மைக் கழக மண்டபத்தில் இவ்வாரம் நடைபெறுகிறது. சிலாங்கூர் தொழிலாளர் ஆக்கத் திறனளிப்பு பிரிவு (யு.பி.பி.எஸ்.) மற்றும் சமூக பாதுகாப்பு நிறுவனம் (சொக்சோ) இணைந்து ஏற்பாடு செய்த நிகழ்வு காலை 9.00 மணி தொடங்கி மாலை 4.30 மணி வரை நடைபெறும். இன்று நடைபெறும் வேலை வாய்ப்பு பயணத் தொடரில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 16 நிறுவனங்கள் பங்கேற்கும் என்று யு.பி.பி எஸ். தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ்.விஜயன் கூறினார். இந்த ஜோப்கேர் சிலாங்கூர் பயணத் தொடரில் பங்குபெறும் சுமார் 80 விழுக்காட்டு நிறுவனங்கள் இத்திட்டத்தில் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும். அவற்றில் கோசன், போஸ் லோஜிஸ்டிக், ஷினெட்சு, வில்மர், எட்ஜெண்டா யூம்ஸ் மற்றும் பொருள் பட்டுவாடா நிறுவனமான லைன் கிளியர் ஆகியவை அடங்கும் என்றார் அவர். அனைத்து முதலாளிகளுக்கும் உடனடியாக தொழிலாளர்கள் தேவைப்படுவதால் வேலை தேடுபவர்கள் இந்த வாய்ப்பை தவறவிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அவர் சொன்னார். இன்றைய நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட வேலை தேடுபவர்களை குறிப்பாக உள்ளூர் மக்களை தாங்கள் இலக்காக கொண்டுள்ளதாகவும் விஜயன் தெரிவித்தார். தற்போதைக்கு எண்பதுக்கும் மேற்பட்ட வேலை தேடுபவர்கள் இணையம் வழி பதிவு செய்துள்ளனர். மேலும் பலர் வேலை வாய்ப்புச் சந்தையின் போது நடைபெறும் நேர்காணலில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார். கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி கிள்ளானில் உள்ள டேவான் ஹம்சாவில் தொடங்கிய இந்த வேலை வாய்ப்பு பயணத் தொடர் இம்மாதம் 25 ஆம் தேதி சபாக் பெர்ணம், டேவான் ஸ்ரீ பெர்ணமில் முடிவடையும். இந்த வேலை வாய்ப்புத் திட்டத்தில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் https://uppselangor.wixsite.com/my-site எனும் அகப்பக்கம் வாயிலாக பதிவு செய்யலாம்