செலாயாங், ஜூன் 22 – தாமான் டெம்ப்ளர் தொகுதியில் மொத்தம் 11 பள்ளிகளில் புதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் உள்கட்டமைப்பு பழுது பார்க்கவும் வேண்டிய அவசியம் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
உதவி தேவைப்படும் ஆறு தேசிய இடைநிலைப்பள்ளிகள் மற்றும் ஐந்து தேசியப் பள்ளிகளின் பட்டியல் மாநில அரசு மற்றும் எம்.பி.ஐ. எனப்படும் மந்திரி பெசார் சிலாங்கூர் (ஒருங்கிணைக்கப்பட்ட) கழகத்திடம் சமர்ப்பிக்கப்படும் என்று அதன் சட்டமன்ற உறுப்பினர் முகமட் சானி ஹம்சான் கூறினார்.
உதாரணத்திற்கு, ரவாங் செமேக்கார் இடைநிலைப் பள்ளி, டாருல் எஹ்சான் இடைநிலைப் பள்ளி மற்றும் செலாயாங் பாரு இடைநிலைப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு மேம்படுத்த வேண்டியுள்ளதோடு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வசதிக்காக புதிய கணினிகள் மற்றும் பிரிண்டர்கள் போன்ற வசதிகளும் தேவைப்படுகிறது.
மத்திய அரசு உதவி பெறும் பள்ளிகள் விண்ணப்பம் செய்ய மாநில அரசு இவ்வாண்டு அனுமதித்துள்ளது. ஆகவே, விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கொண்டு செல்வோம் என்று அவர் நேற்று இங்கு கூறினார்.
கல்வி விவகாரம் மத்திய அரசின் பொறுப்பில் இருந்தாலும் சிலாங்கூர் மாநில அரசு பிள்ளைகளின் கல்வியில் அக்கறை கொண்டுள்ளது என்றார் அவர்.
மிஷனரி பள்ளிகள், சீன ஆரம்பப் பள்ளிகள் மற்றும் தமிழ்ப் பள்ளிகளுக்கு மாநில அரசு தொடர்ந்து உதவி வருகின்றது. கல்வி என்பது மத்திய அரசின் பொறுப்பு என்பதை அறிந்திருந்தும் மாநில அரசு அனைத்து பள்ளிகளையும் நியாயமாக நடத்துகிறது என்பதை இது நிரூபிக்கிறது என அவர் குறிப்பிட்டார்.