பெட்டாலிங் ஜெயா, ஜூன் 30- அடுத்த மாதம் கூடவிருக்கும் சிலாங்கூர் சட்டமன்றத்தில் பண்டார் உத்தாமா உறுப்பினர் கொண்டுவரவிருக்கும் தீர்மானங்களில் பருநிலை மாற்றத்தை எதிர்கொள்வது மற்றும் மக்கள் உதவித் திட்டம் ஆகியவையும் அடங்கும்.
பருநிலை மாற்றத்தினால் ஏற்படும் வெள்ளம், மண்சரிவு போன்ற பேரிடர்களால் பாதிக்கப்படும் மக்களின் நலன் காக்கும் விஷயத்திலும் தாம் கவனம் செலுத்தவுள்ளதாக ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.
கடந்தாண்டு இறுதியில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற இயற்கைப் பேரிடர்களை நாம் படிப்பினையாக கொள்ள வேண்டும். பருவ நிலை மாற்றத்தை தடுத்து நிறுத்துவது இயலாத காரியம் என்பது நமக்கும் தெரியும்.
ஆயினும், இயற்கைப் பேரிடர் ஏற்படும் பகுதிகளில் உள்ள விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பொது மக்களுக்கு எத்தகைய உதவிகளை வழங்குவது என்பதை மாநில அரசு நன்கு அறிந்திருக்க வேண்டும் என்றார் அவர்.
நேற்று சுங்கை காயு ஆரா பகுதியில் வடிகால் முறையை மேம்படுத்தும் திட்டத்தை தொடக்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
மாநில சட்டமன்றக் கூட்டம் வரும் ஜூலை மாதம் 25 முதல் ஆகஸ்டு 5 வரை நடைபெறும் என்று மாநில சட்டமன்ற சபாநாயகர் இங் சுயி லிம் முன்னதாக கூறியிருந்தார்.