செலாயாங், ஜூலை 2- வசதி குறைந்தவர்கள் குறிப்பாக மூத்த குடிமக்களின் நலன் காக்கப்படுவதை உறுதி செய்வதற்கு புதிய கொள்கை உருவாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆதரவற்றோர், மூத்த குடிமக்கள் மற்றும் வசதி குறைந்த தரப்பினருக்கு சகல வித உதவிகளையும் வழங்கப்படுவதை இத்தகைய கொள்கைகள் மூலம் உறுதி செய்ய முடியும் என்று செலாயாங் நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம் லியோங் ஜீ கீன் கூறினார்.
பார்வை குறைபாட்டை எதிர்நோக்கியிருக்கும் மூதாட்டி ஒருவரை ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வேய் கியாட்டுடன் சென்று கண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
உறவினர் ஒருவரின் பராமரிப்பில் இருக்கும் இந்த மூதாட்டி உறவினர் வேலைக்குச் செல்லும் சமயங்களில் தனித்திருக்க வேண்டிய நிலையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பெரும்பாலான மூத்த குடிமக்கள் தங்களைச் சுயமாகப் பாதுகாத்துக் கொள்ளும் நிலையில் இல்லாதிருப்பதால் இவ்விவகாரம் மீது மத்திய அரசு உரிய கவனம் செலுத்துவது அவசியமாகும். இவ்விவகாரத்தை வரும் நாடாளுமன்றக் கூட்டத்தின் போது முன்வைப்பேன் என அவர் குறிப்பிட்டார்.