ஷா ஆலம், ஜூலை 8– பக்கத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் 22 மாத கால ஆட்சியின் போது கடைபிடிக்கப்பட்ட கொள்கைகள் குறிப்பாக வாழ்க்கைச் செலவின நடவடிக்கைகள் நடப்பு நிர்வாகத்தை விட ஆக்ககரமான பலனைத் தந்தது.
எனினும், அக்கொள்கைகளை தொடர்வதற்கு முன்னர் மலாய்க்காரர்களின் உணர்வுகள் சம்பந்தப்பட்ட பல விஷயங்களுக்கு தீர்வு காண வேண்டியிருந்ததாக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
இனப்பாகுபாட்டைக் களைவதற்கான அனைத்துலக மாநாட்டை (ஐசெர்ட்) உதாரணம் கூறலாம். அதனை அமல்படுத்துவதாக இருந்தால் மலாய்க்காரர்களுக்கு விளக்கமளிக்க வேண்டும். இஸ்லாம் மற்றும் தங்களின் சிறப்புரிமை சம்பந்தப்பட்ட விவகாரமாக அதனை அவர்கள் கருதினர் என்று எதிர்க்கட்சித் தலைவருமான அவர் சொன்னார்.
மீடியா சிலாங்கூருக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் டத்தோ ஸ்ரீ அன்வார் இதனைக் குறிப்பிட்டார். அவரது இந்தப் பேட்டி வரும் ஜூலை 13 முதல் 15 வரை சிலாங்கூர் கினி அகப்பக்கத்திலும் டிவி சிலாங்கூர் யூடியுப் சேனல் வாயிலாகவும் ஒளிபரப்பு செய்யப்படும்.
சிலாங்கூர் கினி பத்திரிகையின் 14-20 ஆம் தேதி பதிப்பில் இந்த பேட்டி முழுமையாக இடம்பெறும்.
இந்த பேட்டியில் கெஅடிலான் கட்சித் தேர்தல், விலைவாசி உயர்வு, வரும் பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிகளுடன் ஒத்துழைப்பு, கட்சித் தாவல் தடைச் சட்டம் ஆகிய விவகாரங்கள் குறித்து அவர் கருத்துகளைப் பகிர்ந்து கொள்வார்.