ECONOMYSELANGOR

மக்கள் நலத் திட்ட அறிமுக நிகழ்வு ஜூலை 24ஆம் தேதி பெட்டாலிங்கில் நடைபெறும்

ஷா ஆலம், ஜூலை 8- மாநில அரசின் பல்வேறு  நலத் திட்டங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கிலான ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் திட்டம் வரும் ஜூலை 24 ஆம் தேதி பெட்டாலிங் மாவட்டத்தில் நடைபெறும்.

பெடுலி ராக்யாட் திட்டத்தின் (ஐ.பி.ஆர்.) மறுசீரமைப்பாக விளங்கும் இந்த சிலாங்கூர் பென்யாயாங் திட்டம் பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றத்தின் போலவார்ட் சதுக்கத்தில் காலை 8.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும்.

மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அவர்களால் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கப்படும் இந்த நிகழ்வில் கலைநிகழ்ச்சி ஏரோபிக், சமையல் போட்டி, மலர் அலங்காரம், கண்காட்சி, மக்கள் விளையாட்டு விற்பனை போன்ற நிகழ்வுகள் நடைபெறும்.

மாநில அரசின் திட்டங்கள் வாயிலாக மேலும் அதிகமானோர் பயன்பெறும் வகையில் 35 கோடி வெள்ளி நிதி ஒதுக்கீட்டில் இத்திட்டத்தை மாநில அரசு அமல்படுத்தியுள்ளது.

மக்கள் மத்தியில் கடுமையான நோய்களுக்கான அறிகுறியை முன்கூட்டியே கண்டறிவதற்கு ஏதுவாக 15 லட்சம் வெள்ளி செலவில் சிலாங்கூர் சாரிங் திட்டத்தையும் மாநில அரசு மாநிலத்தின் அனைத்து தொகுதிகளிலும் நடத்தி வருகிறது.


Pengarang :