ஷா ஆலம், ஜூலை 12– தலைநகரிலுள்ள காமெடி கிளப் ஒன்றில் இஸ்லாமிய சமயத்தை கேலி செய்த சந்தேகத்தின் பேரில் விசாரணைக்காக கைது செய்யப்பட்ட பெண்மணி ஒருவர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்.
அந்த பெண்ணுடன் தொடர்புடையவர் என நம்பப்படும் ஆடவர் ஒருவர் மீதும் குற்றஞ்சாட்டப்படும் என்று போலீஸ் செயலாளர் டத்தோ நோர்ஷியா முகமது சாடுடின் கூறினார்.
இவ்விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கை சட்டத்துறை தலைவர் அலுவலகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு அவ்விருவர் மீதும் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டும் உத்தரவும் வெளியிடப்பட்டதாக அவர் சொன்னார்.
விசாரணை அறிக்கை இன்று சட்டத் துறைத் தலைவர் அலுவலகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட பெண்மணி மீது குற்றவியல் சட்டத்தின் 298ஏ பிரிவின் கீழ் குற்றஞ்சாட்ட உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த புகாரில் சம்பந்தப்பட்ட ஆடவருக்கு எதிராக 1998ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லுடகச் சட்டத்தின் 233வது பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டுவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.