ECONOMYMEDIA STATEMENT

இன உணர்வைப் புண்படுத்தும் காணொளி விவகாரம்- காமெடி கிளப் நிறுவனர் கைது 

ஷா ஆலம், ஜூலை 15– காமெடி கிளப் ஒன்றில் பதிவு செய்யப்பட்டதாக நம்பப்படும் இன உணர்வைப் புண்படுத்தும் காணொளி தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக 39 வயது ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறையின் விசாரணைப் பிரிவினர் கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள ஒரு இடத்தில் அந்த ஆடவரை கைது செய்ததாக காவல் துறையின் செயலாளர் டத்தோ நோர்ஷி முகமது சஹாடின் கூறினார்.

நிந்தனையை ஏற்படுத்தும் வகையிலான அறிக்கையை வெளியிட்டதற்காக 1948 ஆம் ஆண்டு நிந்தனைச் சட்டத்தின் 4(1)வது பிரிவின் கீழ் அவ்வாடவர் மீது குற்றஞ்சாட்டப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தொலைத் தொடர்பு சேவையை பொருத்தமற்ற நோக்கத்திற்காக பயன்படுத்தியது தொடர்பில் 1998 ஆம் ஆண்டு தகவல் பல்முனைச் சட்டத்தின் 233 வது பிரிவின் கீழூம் அவ்வாடவருக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் சொன்னார்.

விசாரணைக்காக அவ்வாடரை தடுத்து வைப்பதற்கான நீதிமன்ற அனுமதி இன்று பெறப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அந்த கிளப்பில் நடைபெற்ற காமெடி நிகழ்ச்சி ஒன்றில் பெண்மணி ஒருவர் இஸ்லாத்தை இழிவுபடுத்தும் வகையில் நடந்து கொண்டது தொடர்பில் அந்த கிளப்பின் இணை நிறுவனரை போலீசார் முன்னதாக கைது செய்தனர்.


Pengarang :