ECONOMYMEDIA STATEMENT

கயிற்றினால் கழுத்து இறுக்கப்பட்ட தழும்புடன் சிறுமியின் உடல் மீட்பு- தாயார் கைது

பத்து பகாட், ஜூலை 15- கயிற்றினால் கழுத்து இறுக்கப்பட்டதற்கான தழும்புடன் 11 வயது சிறுமி தனது வீட்டில் இறந்து கிடக்கக் காணப்பட்டார். யோங் பெங், தாமான் புக்கிட் டிரோப்பிகாவில் நேற்று நிகழ்ந்த இச்சம்பவம் ஒரு கொலையாக இருக்கக் கூடும் என  போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் நேற்று மாலை 4.55 மணியளவில் தாங்கள் பொது மக்களிடமிருந்து புகாரைப் பெற்றதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ கமாருள் ஸமான் மாமாட் கூறினார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணைக்கு உதவுவதற்காக அச்சிறுமியின் 34 வயது தாயாரை கைது செய்துள்ளதாக அவர் சம்பவ இடத்தில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

அச்சிறுமியின் நெற்றியில் காயமும் கழுத்தில் கயிற்றினால் இறுக்கப்பட்டதற்கான தழும்பும் காணப்பட்டதாக கூறிய அவர், உடலின் இதர பாகங்களில் காயம் எதுவும் காணப்படவில்லை என்றார்.

இச்சம்பவம் தொடர்பில் அங்கிருந்த சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. சவப் பரிசோதனைக்காக அச்சிறுமியின் உடல் சுல்தானா நோரா இஸ்மாயில் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டது என்றார் அவர்.

அந்த மாது கொடுத்த வாக்குமூலம் சாட்சிகள் கொடுத்த வாக்குமூலத்துடன் முரண்பட்டிருந்த காரணத்தால் அவரை தாங்கள் மேல் விசாரணைக்காக தடுத்து வைத்ததாக அவர் குறிப்பிட்டார்.

குற்றவியல் சட்டத்தின் 302வது  பிரிவின் கீழ் விசாரணைக்காக வரும் 21 ஆம் தேதி வரை தடுத்து வைப்பதற்கான நீதிமன்ற அனுமதியைத் தாங்கள் பெற்றுள்ளதாகவும் அவர் சொன்னார்.

இச்சம்பவம் தொடர்பில் தாங்கள் தொடர்ந்து  விசாரணை மேற்கொண்டு வருவதோடு அச்சிறுமியின் தாயாரை மன நல சோதனைக்கு உட்படுத்தவும் தாங்கள் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.


Pengarang :