ஷா ஆலம், ஜூலை 16- கிள்ளான், மேரு பகுதியில் கடைகளாக மாற்றப்பட்ட 11 அந்நிய நாட்டினரின் குடியிருப்புகள் மீது கிள்ளான் நகராண்மைக் கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அந்நிய நாட்டினர் மேற்கொள்ளும் வர்த்தக நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் இந்த அதிரடிச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கிள்ளான் நகராண்மைக் கழகத்தின் அமலாக்கத் துறை துணை இயக்குநர் ஷஹாருள் அப்துல் மஜிட் கூறினார்.
மளிகைக் கடையாக மாற்றப்பட்ட அந்த குடியிருப்புகளில் மதுபானங்களும் விற்பனை செய்யப்பட்டது விசாரணையில் தெரிய வந்ததாக அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
அந்த கடைகள் யாவும் முறையான வர்த்த்க லைசென்சை கொண்டிருக்கவில்லை. இந்நடவடிக்கையில் பல ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள பொருள்களை நாங்கள் பறிமுதல் செய்தோம் என்றார் அவர்.
இவ்வாண்டில் அதே இடத்தில் மேற்கொள்ளப்படும் மூன்றாவது சோதனை நடவடிக்கை இதுவாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளை முறியடிப்பதில் பொது மக்கள் தங்களுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு நல்கி வருவர் எனத் தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் சொன்னார்.