ஷா ஆலம், ஜூலை 16- ஊழல்வாதிகளுடன் கைக்கோர்க்கக் கூடாது என்பதற்காக கடந்த 2020 ஆம் ஆண்டில் தாம் பிரதமராகும் வாய்ப்பை நிராகரித்ததாக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
சத்திய பிரமாண வாக்குமூலம் (எஸ்.டி.) மூலம் பெரும்பாலான அம்னோ உறுப்பினர்களின் ஆதரவை அப்போதுத தாம் பெற்றிருந்ததாக கெஅடிலான் கட்சித் தலைவரான அவர் குறிப்பிட்டார்.
எனினும், இரு அம்னோ தலைவர்கள் சம்பந்தப்பட்ட நீதிமன்ற வழக்குகள் மூடப்பட வேண்டும என்று நிபந்தனை விதிக்கப்பட்டதால் எங்கள் போராட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை தற்காக்கும் நோக்கில் அந்த வாய்ப்பினை நான் நிராகரித்தேன் என்று அவர் சொன்னார்.
நான் அவ்வாறு செய்வதற்கு சாத்தியம் இல்லை. நான் அவர்களுக்கு நன்றி கூறி அடுத்த பொதுத் தேர்தலில் பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறி விட்டேன் என்றார் அவர்.
“முடிந்து விட்டது, அன்வார் தோற்று விட்டார்“ என சிலர் கூறினர். ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். ஊழல்வாதிகளின் காலில் விழுந்துதான் வெற்றி பெற வேண்டுமானால் வேறு தலைவரைத் தேடிக் கொள்ளுங்கள் என்று அவர் கூறினார்.
இன்று இங்குள்ள ஐ.டி.சி.சி. மாநாட்டு மையத்தில் கெஅடிலான் கட்சியின் 16வது பேராளர் மாநாட்டை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் எதிர்க்கட்சித் தலைவருமான அவர் இதனைத் தெரிவித்தார்.