ECONOMYMEDIA STATEMENT

டிவி 3 முன்னாள் செய்தி வாசிப்பாளரை கடந்தாண்டு முதல் காணவில்லை

ஷா ஆலம், ஜூலை 19 – முன்னாள் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரான ஜலினா ஷஹாரா அஸ்மானை (வயது 58) கடந்த ஆண்டு முதல் காணவில்லை எனக் கூறப்படுகிறது.

கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் தேதி  இந்த விவகாரம் தொடர்பாக அவரது மகன் மைக்கேல் நார்மன் (வயது 33) என்பவரிடம் இருந்து தாங்கள் புகாரைப்    பெற்றதாகக் ஷா ஆலம் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமது இக்பால் இப்ராகிம் கூறினார்.

தன் தாத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளத் தகவலைத் தெரிவிப்பதற்காக நவம்பர் 25 ஆம் தேதியன்று ஜலினாவைத் அவரைத் தொடர்பு கொள்ள அவரின் மகன்  முயன்றதாகவும் எனினும்,  அந்த முயற்சி பலனளிக்கவில்லை என்றும் அவர் சொன்னார்.

நவம்பர் 29 ஆம் தேதியன்று புகார்தாரரும் அவரது மாமாவும் ஷா ஆலம், செக்சன் 3இல் உள்ள ஜலினாவின் வீட்டிற்குச் சென்றபோது, கார் வீட்டில் இருப்பதை அவர்கள் கண்டனர்.

தனியாக வசித்து வந்த பெண்ணின் வீட்டை சோதனை செய்த போது வீடு அலங்கோலமாகக் காணப்பட்டதோடு  வீட்டில் யாரும் காணப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

மேலும் ஜலினாவின் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், வங்கி அட்டைகள், கிரெடிட் கார்டுகள், 600 வெள்ளி ரொக்கம் மற்றும் கார் சாவி ஆகியவை அடங்கிய பர்ஸ் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டது.

பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அந்த பெண்ணின் தடயம் எதுவும் கிடைக்கவில்லை என்று முகமது இக்பால் தெரிவித்தார்.

158 செ.மீ உயரமும் சுமார் 60 கிலோ எடையும் மாநிறமும் கொண்ட அப்பெண்ணைத் தேடும் முயற்சிக்கு உதவுமாறு பொது மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :