கோத்தா பாரு, ஜூலை 25- ஹெரோயின் என நம்பப்படும் போதைப் பொருள் அடங்கிய 100 போத்தல்களுடன் ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். இந்த போதைப் பொருளின் மதிப்பு 200,000 வெள்ளி என நம்பப்படுகிறது.
இரு தினங்களுக்கு முன்னர் பாசீர் மாஸ், கம்போங் குவால் சிதோக்கிலுள்ள உணவகம் ஒன்றில் அந்த ஆடவர் கைது செய்யப்பட்டதாக கிளந்தான் மாநில இடைக்கால போலீஸ் தலைவர் டத்தோ முகமது ஜாக்கி ஹருண் கூறினார்.
இங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் ஓப்ஸ் தாப்பிஸ் செம்பாடான் நடவடிக்கையின் போது அவ்வாடவரை தாங்கள் கைது செய்ததாக அவர் தெரிவித்தார்.
விடியற்காலை 2.36 மணியளவில் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட 23 வயதுடைய அந்த ஆடவரிடம் போலீசார் சோதனை மேற்கொண்டனர் அவ்வாடவரின் கையிலிருந்த பிளாஸ்டிக் பை ஒன்றை சோதனையிட்ட போது அதில் ஹெரோயின் என நம்பப்படும் போதைப் பொருள் அடங்கிய 100 பிளாஸ்டிக் போத்தல்கள் காணப்பட்டன.
அந்த போத்தல்கள் ஒவ்வொன்றிலும் 2,000 வெள்ளி மதிப்பிலான போதைப் பொருள் இருந்தது என்று அவர் சொன்னார்.
இங்குள்ள மாநில போலீஸ் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இத்தகவலை வெளியிட்டார்.
இதனிடையே, கடந்த வியாழக்கிழமை மாலை 5.06 மணியளவில் பாசீர் மாஸ் கம்போங் ரெப்பேக்கில் காரிலிருந்த 34 வயதுடைய ஆடவரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 2,000 யாபா வகை போதைப் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன என்றும் அவர் குறிப்பிட்டார்