ECONOMYMEDIA STATEMENT

காருடன் மோட்டார் சைக்கிள் மோதல்- மூன்று நண்பர்கள் பலி

டுங்குன், ஆக 1– மோட்டார் சைக்கிள் மற்றும் கார் சம்பந்தப்பட்ட விபத்தில் மூன்று இணைபிரியா நண்பர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் புக்கிட் பீசி, ஜெராங்காவ்-ஜபோர் சாலையின் 80வது கிலோ மீட்டரில் நேற்றிரவு 9.25 மணியளவில் நிகழ்ந்தது.

தலையில் ஏற்பட்ட கடுமையான காயங்கள் காரணமாக முகமது ஹபிக் முகமது ஜூக்ரி, முகமது சல்மான் ஃபாரிஸ் சம்சு, முகமது ஃபாரிஸ் ஹைக்கால் முகமது பைசால் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக டுங்குன் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பிரண்டெண்டன் பகாருடின் அப்துல்லா கூறினார்.

ஜாபோரிலிருந்து ஜெராங்காவ் நோக்கி சென்று கொண்டிருந்த புரோட்டோன் ஈஸ்வரா ரகக் கார் மற்றொரு வாகனத்தை முந்த முயன்ற போது எதிரே வந்த ஹோண்டா ரக மோட்டார் சைக்கிளை மோதியதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த விபத்தில் அந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த பதினான்கு வயதினரான அம்மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்றார் அவர்.

இந்த விபத்தில் அந்த காரை ஓட்டிய 50 வயது ஆடவர் மற்றும் அதில் பயணித்த அவரின் மனைவி, இரு பிள்ளைகள் காயங்களுக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.


Pengarang :