ECONOMYMEDIA STATEMENT

மேம்பாலத்திலிருந்து இரு பிள்ளைகளை வீசிக் கொன்ற தந்தை- கெப்போங்கில் சம்பவம்

ஷா ஆலம், ஆக 2- மியன்மார் ஆடவர் சுமார் இருபது மீட்டர் உயரம் கொண்ட அடுக்குச்சாலையிலிருந்து தன் இரு பிள்ளைகளை கீழே வீசிக் கொன்றார். இக்கோரச் சம்பவம் கோலாலம்பூர் மத்திய சுற்றுச்சாலை 2இல் (எம்.ஆர்.ஆர்.2) இன்று அதிகாலை நிகழ்ந்தது.

அதிகாலை 5.50 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் மற்றொரு சிறுவன் கடுமையான காயங்களுக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செந்துல் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பே எங் லாய் கூறினார்.

பொது மக்கள் தன்னை நெருங்கி வருவதைக் அறிந்த அந்த ஆடவர் தானும் பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக அவர்  சொன்னார்.

மூன்று பிள்ளைகளுடன் அந்த அடுக்கு நெடுஞ்சாலையில் அந்த ஆடவர் நின்றிருப்பதைக் கண்ட பொது மக்கள் அவரை அணுக முயன்றனர். உடனே அந்த ஆடவர் அந்த மூன்று பிள்ளைகளையும் சுமார் 20 மீட்டர் உயரம் கொண்ட அந்த பாலத்திலிருந்து கீழே தள்ளி விட்டு தானும் குதித்தார் என அவர் தெரிவித்தார்.

அந்த அடுக்குச் சாலையின் கீழே டேசா ஜெயா செல்லும் சாலையின் சமிக்ஞை விளக்கு அருகே அந்நால்வரும் விழுந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. எட்டு வயது சிறுமியும் ஏழு வயது சிறுவனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த வேளையில் ஐந்து வயது மதிக்கத்தக்க மற்றொரு சிறுவன் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான் என்றார் அவர்.

சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட அகதிகளுக்கான அடையாள அட்டையைக் கொண்டு அவர்கள் மியன்மார் பிரஜைகள் என்பது உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :