குவாந்தான், ஆக 5- குவாந்தான்- சிகாமாட் சாலையின் 126வது கிலோ மீட்டரில் ரொம்பின் அருகே நேற்றிரவு நிகழ்ந்த கோர சாலை விபத்தில் மூன்று ஆடவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
டிரெய்லர் லோரி, புரோட்டோன் ஈஸ்வரா கார் மற்றும் பெரோடுவா அக்ஸியா ரகக்கார் சம்பந்தப்பட்ட இவ்விபத்து இரவு மணி 8.50 அளவில் நிகழ்ந்ததாக ரொம்பின் மாவட்ட போலீஸ் தலைவர் டிஎஸ்பி முகமது அஸ்ஹாரி மொக்தார் கூறினார்.
டிரெய்லர் லாரியின் உதவியாளரான சிகாமாட்டைச் சேர்ந்த அப்துல் ராஸிஸ் மோஹண்டால் (வயது 40), ஈஸ்வரா காரின் ஓட்டுநர் முகமது கைருள் முகமது தாஹிர் (வயது 36), அக்காரில் பயணம் செய்த ஜய்ருள்ஜைய்மி ஜம்பி (வயது 18) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாக அவர் சொன்னார்.
முகமது கைருள் ஓட்டிய புரோட்டோன் ஈஸ்வரா கார் கட்டுப்பாட்டை இழந்து எதிர்தடத்தில் நுழைந்து எதிரே வந்த டிரெய்லர் லாரியுடன் மோதியதாகவும் இதன் விளைவாக கட்டுப்பாட்டை இழந்த லோரி சிகமாட்டிலிருந்து வந்து கொண்டிருந்த பெரோடுவா காரை மோதியதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த விபத்தின் எதிரொலியாக அந்த டிரெய்லர் லோரி சாலையின் வலது புறம் உள்ள பள்ளத்தில் விழுந்தது. இந்த விபத்தில் டிரெய்லர் ஓட்டுநர் ஈஸ்வரா காரின் பயணி மற்றும் பெரோடுவா காரின் ஓட்டுநர் காயங்களுக்குள்ளானதாகவும் அவர் குறிப்பிட்டார்.