ஷா ஆலம், ஆக 12– பூச்சோங் ஜெயா வட்டாரத்தில் உரிமம் இல்லாமல் இயங்கி வந்த இரண்டு பொழுதுபோக்கு மையங்களில் சுபாங் ஜெயா மாநகர் மன்றம் நேற்று சோதனை நடத்தியது.
செர்டாங் மாவட்ட போலீஸ் தலைமையகத்துடன் கூட்டாக மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கையில் அவ்வளாகங்களிலிருந்து பொழுதுபோக்கு உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக நகராண்மைக் கழகம் தனது முகநூல் பதிவில் தெரிவித்தது.
இச்சோதனையின் போது ஒரு பொழுதுபோக்கு மையம் உரிமம் இல்லாமல் பொழுதுபோக்கு நடவடிக்கைகளை மேற்கொண்டது தெரியவந்தது. மற்றொரு மையம் இச்சோதனையின் போது செயல்படவில்லை.
இத்தகைய மையங்கள் மீது காவல்துறை மூலம் அவ்வப்போது கண்காணிப்பு தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நிர்ணயிக்கப்பட்ட விதிகள் மற்றும் நிபந்தனைகளை மீறும் எந்தவொரு தரப்பினர் அல்லது தனிநபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகர் மன்றம் எச்சரித்தது.