ECONOMYNATIONAL

செப்டம்பரில் மாபெரும் வேலை வாய்ப்பு பெருவிழா- 50,000 பேருக்கு வேலை வாய்ப்பு

ஷா ஆலம், ஆக 13– வரும் செப்டம்பர் மாதம் 29 மற்றும் 30 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள ‘கார்னிவெல் கெர்ஜாயா மெகா சிலாங்கூர்‘ எனும் மாபெரும் வேலை வாய்ப்பு பெருவிழாவில் சுமார் 50,000 வேலை வாய்ப்புகள் வேலை தேடுவோருக்கு வழங்கப்படுகின்றன.

செர்டாங்கிலுள்ள மலேசிய விவசாய கண்காட்சி பூங்காவில் (மேப்ஸ்) நடைபெறும் இந்த வேலை வாய்ப்பு பெருவிழாவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 500 முதலாளிகள் பங்கேற்கவுள்ளதாக மனித மூலதன மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது கைருடின் ஓத்மான் கூறினார்.

இந்த இரண்டாம் கட்ட வேலை வாய்ப்பு பெருவிழாவில் பங்கேற்க இதுவரை 100 முதலாளிகள் ஆர்வம் காட்டியுள்ளதாக சிலாங்கூர் கினியிடம் அவர் தெரிவித்தார்.
வேலை தேடிக் கொண்டிருக்கும் இளைஞர்களும் மாற்றுத் திறனாளிகளும் இந்த வாய்ப்பினை முறையாக பயன்படுத்திக் கொள்ளும்படி தாம் கேட்டுக் கொள்வதாக அவர் சொன்னார்.

இந்த வேலை வாய்ப்பு தொடர்பில் மேல் விபரங்களைப் பெறுவதற்கும் பதிவு செய்வதற்கும் www.selangorjobportel.com.my என்ற அகப்பக்கத்தை வலம் வரும்படி வேலை தேடுவோரை அவர் கேட்டுக் கொண்டார்.

சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டிலான முதலாவது மாபெரும் வேலை வாய்ப்பு கண்காட்சி கடந்த ஜூன் மாதம் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் ஷா ஆலம் எம்.பி.எஸ்.ஏ. மாநாட்டு மையத்தில் நடைபெற்றது. இந்த வேலை வாய்ப்பு கண்காட்சியில் சுமார் 100 நிறுவனங்கள் பங்கு கொண்டன.


Pengarang :