ஷா ஆலம், ஆக 15– வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் ஆறு வயது சிறுவன் கருகி மாண்டான். இத்துயரச் சம்பவம் கினாபாத்தாங்கான், கம்போங் பெர்பாடுவானில் நேற்றிரவு நிகழ்ந்தது.
இந்த சம்பவத்தில் முகமது அட்லின்ஷா முகமது அட்ஸ்னி (வயது 6) பரிதாபமாக பலியான வேளையில் அவ்வீட்டிலிருந்த தாய், தந்தை மற்றும் சகோதரர்கள் உள்ளிட்ட ஐவர் காயங்களுக்குள்ளானதாக பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் நேற்று பின்னிரவு 12.40 மணியளவில் தாங்கள் தகவலைப் பெற்றதாக கினாபாத்தங்கான் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர் நுருள் அஸ்லான் ஷா கூறினார்.
ஆறு பேர் கொண்ட தீயணைப்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்ததாக கூறிய அவர், விடியற்காலை 2.04 மணியளவில் தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது என்றார்.
பின்னர் அவ்வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் அந்த சிறுவன் அறை ஒன்றில் கருகிய நிலையில் இறந்து கிடப்பது கண்டு பிடிக்கப்பட்டதோடு அவ்வீட்டிலிருந்த மேலும் ஐவர் 70 விழுக்காட்டு தீக்காயங்களுடன் உயிர்தப்பினர் என்றார் அவர்.
காயமுற்ற அனைவரும் கினபாத்தாங்கான் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.