ஷா ஆலம், ஆக 15- சரவா மாநிலத்தின் லிம்பாங், ஜாலான் நாங்கா மெனாமிட்டில் இன்று காலை நிகழ்ந்த கார் மற்றும் பிக்அப் வாகனம் சம்பந்தப்பட்ட விபத்தில் காரின் ஓட்டுநரான பெண்மணி தீயில் கருகி மாண்டார்.
இந்த விபத்து தொடர்பில் இன்று காலை 9.00 மணியளவில் தாங்கள் அவசர அழைப்பை பெற்றதாக சரவா மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கை அறைப் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
லிம்பாங் தீயணைப்பு நிலையத்திலிருந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் காரில் ஏற்பட்ட தீயை அணைத்ததாக அவர் சொன்னார்.
தீயில் சேதமுற்ற அந்த புரோட்டோன் சாகா ரகக்காரை சோதனையிட்ட போது அதில் ஓட்டுநரான பெண்மணி கருகி மாண்டது கண்டு பிடிக்கப்பட்டது என்றார் அவர்.
இந்த விபத்தில் மரணமடைந்த பெண்மணி இன்னும் அடையாளம் காணப்படவில்லை எனக் கூறிய அவர். இது சம்பந்தப்பட்ட மற்றொரு வாகனமான ஹைலக்ஸ் ஓட்டுநர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாக தெரிவித்தார்.