ஷா ஆலம், ஆக 21- நீதித் துறை மீதான தாக்குதல்களை நிறுத்திக் கொள்ளும்படி அரசியல் கட்சிகளுக்கு குறிப்பாக அம்னோவுக்கு பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி அறிவுறுத்தியுள்ளது.
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு எதிரான எஸ்.ஆர்.சி. இண்டர்நேஷனல் ஊழல் வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நீதித் துறைக்கு எதிரானத் தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக பக்கத்தான் தலைவர் மன்றம் கூறியது.
சம்பந்தப்பட்டத் தரப்பினரின் குறிப்பாக அம்னோ ஆதரவாளர்கள் மற்றும் இணைய பதிவேட்டாளர்களின் தாக்குதல்கள் நாட்டின் தலைமை நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுக்கும் அளவுக்கு அச்சுறுத்தல்களாக மாறி வருகின்றன என்று அது தெரிவித்தது.
ஒருவருக்கு காயம் விளைவிக்க அல்லது மரணம் விளைவிக்கப் போவதாக விடுக்கப்படும் மிரட்டல்கள் தண்டனைச் சட்டத்தின் கீழ் வகைப்படுத்தக் கூடிய கடும் குற்றங்களாகும் என்றும் அந்த கூட்டணி அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது.
நாட்டின் தலைமை நீதிபதியை காயப்படுத்தப் போவதாக அல்லது கொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுத்தவர்கள் விசாரிக்கப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்ற தேசிய போலீஸ் படைத் தலைவரின் அறிக்கையை தாங்கள் வரவேற்பதாகவும் அந்த கூட்டணி தெரிவித்தது.
நாட்டின் நீதி பரிபலானத் துறையின் சுதந்திரம் எப்போதும் கட்டிக்காக்கப்பட வேண்டும் என்றும் அந்த கூட்டணி தனது அறிக்கையில் வலியுறுத்தியது.