ECONOMYMEDIA STATEMENT

அடுக்குமாடி குடியிருப்பின் 9வது மாடியிலிருந்து விழுந்து 5 வயது சிறுமி மரணம்

கோலாலம்பூர், ஆக 26- சிராஸ், ஸ்ரீ சபா அடுக்குமாடி குடியிருப்பின் 9வது மாடியிலிருந்து விழுந்து ஐந்து வயதுச் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த பரிதாபச் சம்பவம் இன்று காலை 9.30 மணியளவில் நிகழ்ந்தது.

இந்த சம்பவம் தொடர்பில் காலை 11.54 மணியளவில் தாங்கள் பொது மக்களிடமிருந்து புகாரைப் பெற்றதாக சிராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஸாம் ஹலிம் ஜமாலுடின் கூறினார்.

வீட்டின் சமையலறை பால்கனியிலிருந்து அச்சிறுமி தவறி விழுந்தது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அவர் சொன்னார்.

இச்சம்பவம் நிகழ்ந்த போது அச்சிறுமியின் தாயாரும் இளைய சகோதரியும் வீட்டில் இருந்த போதிலும் இந்த விபரீதத்தை அவர்கள் உணரவில்லை என்று அவர் தெரிவித்தார்.
தரையில் விழுந்த அக்குழந்தை உடனடியாக துவாங்கு முகரிஸ் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாகவும் எனினும் அவர் உயிரிழந்து விட்டதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியதாகவும் ஏசிபி ஸாம் ஹலிம் கூறினார்.

இச்சம்பவம் தொடர்பில் 2001 ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இத்தகைய விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்வதை தடுப்பதற்கு ஏதுவாக தங்கள் பிள்ளைகளை அணுக்கமாக கண்காணித்து வரும்படி பொது மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :