ECONOMYMEDIA STATEMENTNATIONAL

அம்பாங்கில் வெ.363 கிலோ போதைப் பொருள் பறிமுதல்- இரு ஆடவர்கள் கைது

ஷா  ஆலம், ஆக 29- கம்போங் பாரு அம்பாங்கில் கடந்த 20 ஆம் தேதி போலீசார் மேற்கொண்ட அதிரச் சோதனையில் 1 கோடியே 8 லட்சத்து 90 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள மெத்தம் பெத்தமின் வகை போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

அந்த வளாகத்தின் முன் நிறுத்தப்பட்டிருந்த டோயோட்டா ஹைலக்ஸ் நான்கு சக்கர இயக்க வாகனத்தில் 349 சீனத் தேயிலை பொட்டலங்களில் மடிக்கப்பட்டிருந்த மெத்தம் பெத்தமின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அர்ஜூனைடி முகமது கூறினார்.

அந்த வளாகம் மீது புக்கிட் அமான் போதைப் பொருள் தடுப்பு பிரிவு நடத்திய சோதனையின் போது 23 வயது ஆடவர் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அவ்வாடவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் பலனாக அருகிலுள்ள ஒரு இடத்தில் 51 வயது ஆடவர் பிடிபட்டதோடு அவரிடமிருந்து போதைப் பொருள் கைபற்றப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.

அந்த 23 வயது இளைஞர் போதைப் பொருள் விநியோகிப்பாளராகவும் 51வயது ஆடவர் நடவடிக்கைகளைக் கண்காணிப்பவராகவும் செயல்பட்டு வந்ததாக கூறிய அவர், இவ்விருவரும் வரும் 2 ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

இந்த போதைப் பொருள் பறிமுதல் தொடர்பில் 1952 ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டத்தின் 39பி பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் அவர்.


Pengarang :