ECONOMYMEDIA STATEMENT

காரினுள் ஆடவர் சடலம்- ஏழு அந்நிய நாட்டினர் கைது

கோலாலம்பூர், ஆக 30 – இங்குள்ள ஜாலான் துகு எனுமிடத்தில் காரின் பின்புறம் பொருள் வைக்குமிடத்தில் உள்ளூர் ஆடவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பில் 7 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பில் தகவல் கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து 20 முதல் 26 வயதுக்குட்பட்ட ஐந்து ஆண்களும் இரண்டு பெண்களும் காலை 6.40 மணிக்கு  கைது செய்யப்பட்டதாக டாங் வாங்கி மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி நூர் டெல்ஹான் யஹாயா தெரிவித்தார்.

சம்பவ இடத்தில் விசாரணை செய்த போது  41 வயதுடைய உள்ளூர் ஆடவர்  ஒரு காரின் பூத் பகுதியில்  இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். மருத்துவச் சோதனையின் போது அந்த நபர் இறந்துவிட்டது உறுதி செய்யப்பட்டது என அவர் சொன்னார்.

இந்த விசாரணைக்கு  உதவுவதற்காக 20 முதல் 24 வயதுடைய நான்கு ஆண்கள் மற்றும் ஒரு பெண் அடங்கிய ஐந்து வெளிநாட்டினரை நேற்று பிற்பகல் 12.45 மணியளவில் போலீசார் கைது செய்தனர் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்கள் வழங்கிய தகவலின் பயனாக நான்கு மணி நேரத்திற்குள் 26 மற்றும் 22 வயதுடைய வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு ஆண் மற்றும் பெண் அடங்கிய மேலும் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர் என்றார் அவர்.

கொலைக்கான நோக்கம்  மற்றும் காரணத்தைக் கண்டறிய தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் கூறிய அவர், மேல் விசாரணைக்காக அவர்களை  குற்றவியல் சட்டத்தின் 302 வது பிரிவின் கீழ் தடுத்து வைப்பதற்கான நீதிமன்ற ஆணை பெறப்படும்
என்று சொன்னார்.


Pengarang :