ஜோகூர் பாரு, செப் 1- குடும்பத்தினருடன் மலையேறும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது முதியவர் ஒருவர் மூச்சுத் திணறி மரணமடைந்தார். இச்சம்பவம், கூலாய், குனோங் பூலாய் மலையடிவாரத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் நேற்று காலை நிகழ்ந்தது.
இச்சம்பவம் குறித்து காலை 10.11 மணியளவில் தகவல் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து கூலாய் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக தீயணைப்புத் துறையின் அதிகாரி அஸ்மிஸா ஜைனி கூறினார்.
தீயணைப்பு வீரர்கள் சுவா கோக் வா (வயது 62) என்ற அந்த ஆடவரின் சடலத்தை மீட்டு மலையடிவாரத்திலுள்ள பாதுகாவலர் சாவடிக்கு கொண்டு வந்ததாக அவர் குறிப்பிட்டார்.
சம்பவ இடத்திலேயே அந்த முதியவர் மரணமடைந்து விட்டது உறுதி செய்யப்பட்டதாக இன்று இங்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் சொன்னார்.
இதனிடையே, இஸ்கந்தார் புத்ரி, ஜாலான் இஸ்மாயில் சுல்தான் 6.6வது கிலோ மீட்டரில் உள்ள சுங்கை மிலாயுவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மியன்மார் ஆடவர் தவறி ஆற்றில் விழுந்து மரணமடைந்த தகவலையும் அவர் வெளியிட்டார்.