ECONOMYMEDIA STATEMENT

மலையேறும் போது காணாமால் போன மூவர் பத்திரமாக மீட்பு

கோத்தா திங்கி, செப் 2– குனோங் பந்தி மலையேறும் நடவடிக்கையின் போது வழிதவறிய ஒரு பெண் உள்ளிட்ட மூவர் நேற்று பத்திரமாக மீட்கப்பட்டனர். வாட்ஸ்ஆப் புலனம் மூலம் தாங்கள் இருக்குமிடத்தை அவர்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து அவர்களை மீட்டனர்.

அந்த மலையின் இரண்டாவது சோதனை மையத்திலிருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் நேற்றிரவு 10.00 மணியளவில் அம்மூவரும் கண்டு பிடிக்கப்பட்டதாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இரண்டாம் நிலை அதிகாரி முகமது ஷூக்ரி முகமது யூசுப் கூறினார்.

கான் சென் யாங் (வயது 23), யோங் சின் செங் (வயது 25) மற்றும் வோங் ஸோ யீ (வயது 22) ஆகிய அந்த மூவரும் பாதுகாப்பாக மலையடிவாரத்திற்கு கொண்டு வரப்பட்டதாக அவர் சொன்னார்.

நேற்று மாலை 4.53 மணியளவில் மலையிலிருந்து இறக்கும் போது தாங்கள் வழி தவறி விட்டதாக அவர்கள் கைப்பேசி வாயிலாக தகவல் தெரிவித்திருந்தனர் என்று அவர் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து பத்து பேரடங்கிய மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர் என்று அவர் மேலும் சொன்னார்.


Pengarang :