ஷா ஆலம், செப் 4- சிலாங்கூர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (பி.கே.என்.எஸ்.) ஏற்பாடு செய்துள்ள சிலாங்கூர் தொழில்முனைவோர் கண்காட்சி 2022 (செல்பிஸ் 2022) வணிகர்கள் தங்கள் பொருள்களை சந்தையில் அறிமுகப்படுத்துவதற்குரிய வாய்ப்பினை வழங்கும்.
ஹனிம் எனும் தயாரிப்பு பொருள்கள் ஓராண்டுக்கு மேலாக சந்தையில் உள்ள போதிலும் அதன் தயாரிப்புகளான வீட்டு வாசனைப் பொருள், மேனி நறுமணத் திரவியங்கள் மற்றும் ஆடை ஆபரணங்கள் இன்னும் மக்கள் மத்தியில் பிரசித்தி பெறாமலிருப்பதாக பாடகியான லிசா ஹனிம் கூறினார்.
நான் மக்கள் மத்தியில் பிரசித்தி பெற்றவராக இருந்த போதிலும் வர்த்தக துறை எனக்கு புதிதான ஒன்றாக உள்ளது. ஆகவே, பி.கே.என்.எஸ். நடத்தும் இந்த தொழில்முனைவோர் கண்காட்சியில் பங்கேற்க முடிவெடுத்தேன் என்றார் அவர்.
பி.கே.என்.எஸ். குரோ உள்ளிட்ட பல திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. அவர்கள் உண்மையிலேயே உதவும் நோக்கத்தைக் கொண்டுள்ளனர். இத்தகைய அமைப்புகள் நடத்தும் கண்காட்சிகளில் பங்கேற்பதன் மூலம் மேலும் பலரது அறிமுகத்தைப் பெற்று வர்த்தகத்தை விரிவு படுத்த இயலும் என அவர் குறிப்பிட்டார்.
இங்குள்ள ஷா ஆலம் மாநாட்டு மையத்தில் நேற்று நடைபெற்ற செல்பிஸ் 2022 கண்காட்சியின் போது செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.