கிள்ளான், செப் 10- கடுமையான வெள்ளப் பிரச்னை ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக இங்குள்ள தாமான் மெலாவிஸ் பகுதியில் கூடுதலாக வெள்ள நீர் சேகரிப்பு குளங்களும் நீர் இறைப்பு பம்ப் சாதனங்களும் பொருத்தப்படும்.
விரைவில் ஏற்படும் என எதிர்பார்க்கப்படும் கடல் பெருக்கை கருத்தில் கொண்டு அப்பகுதியில் கால்வாய்களை தரம் உயர்த்துவது மற்றும் வெள்ளத் தடுப்பணைகளை நிர்மாணிப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இந்த வீடமைப்பு 60 ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்டது. இதனைச் சுற்றியுள்ளப் பகுதிகள் துரித வளர்ச்சி கண்டு வருகின்றன. இதனால் இப்பகுதியில் நீரோட்டப் பிரச்னை ஏற்பட்டுள்ள நிலையில் கடல் பெருக்கு மற்றும் கடுமையான மழையின் போது நிலைமை மோசமடைந்து விடுகிறது என்று அவர் சொன்னார்.
நீர் மெதுவாக வடிவதை தடுப்பதற்காக கால்வாய்களை துப்புரவு செய்வது தற்காலிக வெள்ள நீர் சேகரிப்பு குளங்களை அமைப்பது, நீர் இறைப்பு பம்ப் கருவிகளை பொருத்துவது போன்ற பணிகளை மேற்கொள்ளவிருக்கிறோம் என்றார் அவர்.
கால்வாய்களை தரம் உயர்த்துவது மற்றும் வெள்ளத் தடுப்பணைகளை நிர்மாணிப்பது ஆகிய திட்டங்கள் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட வேளையில் அது வரும் 2024 ஏப்ரலில் முற்றுப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது என் அவர் சொன்னார்.