தாப்பா, செப் 12- பீடோர் வான் பகுதியில் சென்று கொண்டிருந்த போது கோலாலம்பூர் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு கோரபுரத்துடன் தொடர்பை இழந்த ஹெலிகாப்டரை தேடி மீட்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நேற்று மாலை தொடங்கி இரவு வரை நீடித்த மோசமான வானிலை காரணமாக நிறுத்தப்பட்ட தேடும் பணி இன்று காலை மீண்டும் தொடர்வதாக பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமது யூஸ்ரி ஹசான் கூறினார்.
இந்த ஹெலிகாப்டரை தேடி மீட்கும் பணிக்காக பீடோர் போலீஸ் தலைமையகத்தில் சிறப்பு நடவடிக்கை அறை ஒன்று திறக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
வான் பிரிவை உள்ளடக்கிய காவல் துறை, பொது நடவடிக்கைப் பிரிவு, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, வன இலாகா உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த 11 அதிகாரிகள் மற்றும் 68 வீரர்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஹீலிர் பேராக் எல்லைப் பகுதியில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்வதற்காக நேற்று மாலை 4.00 மணியளவில் அப்பகுதிக்கு ஹெலிகாப்டர் ஒன்று அனுப்பப்பட்டது என அவர் தெரிவித்தார்.
ஜெராம் மெங்குவாங் பகுதியில் பலத்த வெடிச் சத்தம் கேட்டதாகவும் கம்போங் கெனாங்கான் பகுதியில் ஹெலிகாப்டர் தாழ்வாகப் பறந்ததாகவும் பொது மக்கள் தகவல் அளித்துள்ளனர். ஆகவே, அப்பகுதியை மையமிட்டு தேடுதல் நடவடிக்கை இன்று தொடங்கப்படும் என்றார் அவர்.
தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான அந்த யூரோகாப்டர் ரக ஹெலிகாப்டர் நேற்று பிற்பகல் 12.16 மணியளவில் பீடோர் வான் பகுதியில் பறந்து கொண்டிருந்த போது காணாமல் போனது. அந்த ஹெலிகாப்டர் காணாமல் போன போது விமானி மற்றும் அதில் இருந்தார்.