ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

கடல் பெருக்கு- கிள்ளான் மாவட்டத்தில் மதகு, தடுப்பணை பாதுகாப்பாக உள்ளது

கிள்ளான், செப் 13- வடிகால் மற்றும் நீர் பாசனத் துறையின் இடைவிடாத பராமரிப்பு பணிகள் காரணமாக கிள்ளான் மாவட்டத்திலுள்ள அனைத்து தடுப்பணைகள் மற்றும் மதகுகள் பாதுகாப்பான நிலையில் உள்ளன.

எனினும்,  இம்மாதம் மத்தியிலிருந்து டிசம்பர் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படும் வடமேற்கு பருவமழையின் போது இம்மாவட்டத்தில் இந்த இயற்கைப் பேரிடரும் ஏற்படாது எனத் தாங்கள் எதிர்பார்ப்பதாக கிள்ளான் மாவட்ட அதிகாரி ஷாமான் ஜலாலுடின் கூறினார்.

இம்மாட்டத்தில் பழுதடைந்த நிலையில் காணப்பட்ட அனைத்து மதகுகளையும் வடிகால் நீர்ப்பாசனத் துறை சரி செய்து விட்டதால் அவை அனைத்தும் பாதுகாப்பான நிலையில் உள்ளன. அவசியம் ஏற்படும் பட்சத்தில் அந்த மதகுகள் செயல்படத் தொடங்கும் என அவர் குறிப்பிட்டார்.

நேற்று, காப்பார் பெங்கலான் தோக் மூடாவிலுள்ள மதகைப் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

நேற்று காலை கடலோரப் பகுதிகளில் 5.46 மீட்டர் வரை அலைகள் உயர்ந்த சம்பவத்தினால் இப்பகுதியிலுள்ள தடுப்பணைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என அவர் சொன்னார்.

நமது தடுப்பணைகள் 5.5 மீட்டர் உயரம் வரை எழக்கூடிய அலைகளைத் தாங்கும் சக்தியைக் கொண்டுள்ளன. ஆங்காங்கே சிறிய பழுதுகள் ஏற்பட்டன. இது வழக்கமான ஒன்றாகும் என்றார் அவர்.

சிலாங்கூர் தென்மேற்கு பருவமழையிலிருந்து வடகிழக்கு பருவமழைக்கு மாறும் காரணத்தால் இம்மாத மத்தியிலிருந்து டிசம்பர் மாதம் வரை 100 மில்லி மீட்டர் முதல் 400 மில்லி மீட்டர் வரை மழைப் பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வுத் துறை கணித்துள்ளது.

அதே காலக்கட்டத்தில் கோலக்  கிள்ளான் கடலோரப் பகுதிகளில் 5.5 மீட்டர் அளவுக்கு கடல் நீர் மட்டம் உயரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


Pengarang :