ஷா ஆலம், செப் 13– கடையில் கூச்சலிட்டுக் கொண்டிருந்த தனது இரு வாடிக்கையாளர்களை அமைதியுடன் இருக்கச் சொன்ன வணிகருக்கு அடி, உதை விழுந்தது. இச்சம்பவம் தாமான் பண்டான் சகாயாவில் உள்ள மளிகைக் கடை ஒன்றில் நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் நிகழ்ந்தது.
மதுபானங்கள் வாங்குவதற்காக மூன்று ஆடவர்கள் 25 வயதுடைய அந்த வணிகரின் கடைக்கு வந்ததாக பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
கடையில் அம்மூவரும் உரக்க சத்தமிட்டதைக் கண்ட அதன் உரிமையாளர் அவர்களைக் கடிந்து கொண்டதோடு கடையை விட்டு வெளியேறும்படியும் உத்தரவிட்டுள்ளார் என்று அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது பாரூக் எஷாக் கூறினார்.
அம்மூவரும் கடையை விட்டு வெளியேறினர். எனினும், அவர்களில் இருவர் திரும்பி வந்து அந்த வணிகரை கையால் கட்டையாலும் சரமாரியாகத் தாக்கினர். வெளியிருந்த அந்த ஆடவர்களின் சகா மற்றும் பொது மக்கள் விரைந்து வந்து அவர்களை சண்டையைத் தடுத்து அவர்களை விலக்கி விட்டுள்ளனர் என்று பாரூக் சொன்னார்.
அந்த வணிகருக்கு உடலின் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்ட வேளையில் 23 மற்றும் 26 வயதுடைய அவ்விரு ஆடவர்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சந்தேகப் பேர்வழிகள் இருவரும் மியன்மார் பிரஜைகள் என்றும் வேலையில்லாத அவர்களிடம் செல்லத்தக்கப் பயணப் பத்திரம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.