ஷா ஆலம், செப் 15- சிறு தொழில் தொடங்க விரும்பும் பெண்கள் நியாகா டாருல் ஏசான் (நாடி) கடனுதவித் திட்டத்திற்கு விண்ணப்பிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
வணிக மூலதனமாக 1,000 வெள்ளி முதல் 5,000 வெள்ளி வரை கடனுதவி அளிக்கும் திட்டத்திற்கு http://mikrokredit.selangor.gov.my/ என்ற அகப்பக்கம் மூலமாக அல்லது மாநிலத்திலுள்ள 20 ஹிஜ்ரா கிளைகள் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று யாயாசான் ஹிஜ்ரா (ஹிஜ்ரா) கூறியது.
இந்தத் திட்டம் சிலாங்கூர் மக்கள் அனைவருக்கும், குறிப்பாக இல்லத்தரசிகளுக்கு திறந்திருக்கும் என்று அவ்வாரியம் தனது முகநூல் பதிவில் கூறியது.
இந்த திட்டத்தில் பங்கு பெறுவதற்கான நிபந்தனைகள் பின்வருமாறு:
• பெண்களுக்கான பிரத்தியேகத் திட்டம்
• மலேசிய பிரஜைகளாக இருக்க வேண்டும்
• சிலாங்கூர் குடிமக்களாக அல்லது ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வசிப்பவர்களாக இருக்க வேண்டும்
• சிலாங்கூரில் வாக்காளர்களாக பதிந்திருக்க வேண்டும்
• 18 முதல் 65 வயது வரையிலானவர்கள் விண்ணப்பிக்கலாம்
• ஒரு குழுவில் மூன்று உறுப்பினர்களை உருவாக்க ஒப்புக் கொள்ள வேண்டும்
இத்திட்டத்திற்கு மொத்தம் 86 லட்சத்து 10 ஆயிரம் வெள்ளி மதிப்பிலான 1,722 கடனுதவி விண்ணப்பங்களை இவ்வாண்டில் பெற ஹிஜ்ரா இலக்கு நிர்ணயித்துள்ளது.
2022 வரவு செலவுத் திட்டத்தில் ஹிஜ்ரா கடனுதவித் திட்டத்திற்காக 12 கோடி வெள்ளியை மாநில அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.