காஜாங், செப் 16- சமூகத் தோட்டங்களில் விளையும் காய்கறிகளை மாநில அரசின் மலிவு விற்பனையில் சந்தைப்படுத்த சுங்கை ராமால் சட்டமன்ற உறுப்பினர் மஸ்வான் ஜோஹார் பரிந்துரைத்துள்ளார்.
சிலாங்கூ மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தினால் (பி.கே.பி.எஸ்.) விற்பனை செய்யப்படும் காய்கறிகளும் சமூக தோட்ட விளைபொருள்களும் வெவ்வேறானவையாக உள்ளதை தாம் உறுதி செய்ய விரும்புவதாக அவர் சொன்னார்.
வணிகர்களை குறிப்பாக சமூக தோட்டங்களை நடத்தி வருவோரை ஒன்று திரட்டும் முயற்சியில் நான் ஈடுபட்டு வருகிறேன். நிச்சயமாக அவர்களின் உற்பத்தி பொருள்கள் சந்தையைவிட மலிவானதாக இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.
இடைத் தரகர்களை தவிர்க்கும் நோக்கில் சமூகத் தோட்டத் துறையினரை நாங்கள் அணுக விரும்புகிறோம், இதன் மூலம் விளைபொருள்கள் குறைவான விலையில் பயனீட்டாளர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய முடியும் என்றார் அவர்.
இங்குள்ள பாங்கி பி.கே.என்.எஸ். காம்ப்ளெக்சில் இன்று நடைபெற்ற மாநில அரசின் மலிவு விற்பனைத் திட்டத்தைப் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதனிடையே, இன்றைய மலிவு விற்பனைக்கு வருகை புரிந்த 100 வாடிக்கையாளர்களுக்கு தலா 5.00 வெள்ளி மதிப்புள்ள கழிவு கூப்பன்களை மஸ்வான் வழங்கினார். இதற்கான செலவுகளை தாமே ஏற்றுக் கொள்வதாக அவர் சொன்னார்.