HEALTHMEDIA STATEMENTSELANGOR

விளையாடும் போது கண்ணாடி நெஞ்சில் பாய்ந்தது- எழு வயதுச் சிறுவன் பரிதாப மரணம்

ஷா ஆலம், செப் 18- வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது கண்ணாடித் துண்டு நெஞ்சில் பாய்ந்ததில் ஏழு வயதுச் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
இத்துயரச் சம்பவம் பந்திங், கம்போங் புக்கிட் சங்காங்கில் நேற்று மாலை 4.00 மணியளவில் நிகழ்ந்ததாக கோல லங்காட் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் அகமது ரிட்சுவான் முகமது நோர் சாலே கூறினார்.

வீட்டின் வரவேற்புக் கூடத்திலுள்ள சோபாவில் குதித்து விளையாடிக் கொண்டிருந்த அச்சிறுவன் தவறி எதிரே இருந்த கண்ணாடி மேசையின் மீது விழுந்துள்ளார். இச்சம்பவம் நிகழ்ந்த போது அவரின் பெற்றோர்கள் வீட்டில் இருந்துள்ளனர் என்று அவர் சொன்னார்.

மேசையின் மீது விழுந்ததில் அதன் மீது இருந்த கண்ணாடி உடைந்து அதன் சில்லுகள் அச்சிறுவனின் நெஞ்சில் பாய்ந்துள்ளன. அச்சிறுவனை பெற்றோர் உடனடியாக அருகிலுள்ள கிளினிக்கிற்கு கொண்டுச் சென்றுள்ளனர். பின்னர் பந்திங் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார் என அவர் குறிப்பிட்டார்.

சவப்பரிசோதனைக்குப் பின்னரே அச்சிறுவனின் மரணத்திற்கான காரணம் கண்டறியப்படும் எனக் கூறிய அவர், இச்சம்பவம் குறித்து 2001 ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் 31(1)(ஏ) பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.


Pengarang :