ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

வெள்ளப் பேரிடரை எதிர் கொள்ள முழு நிலையில் கோல லங்காட் நகராண்மைக் கழகம்

கோல லங்காட், செப் 21– வடகிழக்கு பருவ நிலை மாற்றம் காரணமாக ஏற்படக்கூடிய எதிர்பாரா நிகழ்வுகளை எதிர் கொள்வதற்கான முழு தயார் நிலையில் கோல லங்காட் நகராண்மைக் கழகம் உள்ளது.

அவசியம் ஏற்படும் பட்சத்தில் துரித நடவடிக்கையில் இறங்க நகராண்மைக் கழகத்தின் அதிரடி நடவடிக்கை பணிக்குழு (பந்தாஸ்) தயாராக உள்ளதாக நகராண்மைக் கழகத் தலைவர் டத்தோ அமிருள் அஜிசான் அப்துல் ரஹிம் கூறினார்.

பருவநிலை மாற்றம் தொடர்பான தகவல்களை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். உறுப்பினர்கள் மற்றும் உபகரண ரீதியாக நாங்கள் முழு தயார் நிலையில் உள்ளோம். முன்பு இத்தகைய பேரிடர்களின் போது படகுகளை இதர துறைகளிடமிருந்து இரவல் வாங்கிக் கொண்டிருந்த நிலையில் தற்போது நாங்களே சொந்தமாக இரு படகுகளை வாங்கி விட்டோம் என அவர் குறிப்பிட்டார்.

மாவட்ட நில அலுவலகம், போலீஸ் மற்றும் தீயணைப்புத் துறையினரை உள்ளடக்கிய பேரிடர் தயார் நிலைப் பயிற்சிகளை மேற்கொள்வதற்கும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம். கடந்தாண்டைப் போல் மோசமான வெள்ளப் பேரிடர் இம்முறை ஏற்படாது என நம்புகிறோம் என்றார் அவர்.

வெள்ளத்தில் பாதிக்கப்படுவோரை தங்க வைப்பதற்கு அனைத்து பாலாய் ராயா மற்றும் சமூக மண்டபங்கள் முழு தயார் நிலையில் வைத்திருக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

முழு உறைவிடப் பள்ளிகளை தற்காலிக நிவாரண மையங்களாக பயன்படுத்துவதற்கு வசதியான தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் அனுமதியளித்துள்ளதால் பந்திங்கிலுள்ள அறிவியல் இடைநிலைப்பள்ளியும் இந்த நிவாரண மையத் திட்டத்தில் உள்ளடக்கப்படும் என அவர் குறிப்பட்டார்.


Pengarang :