ஷா ஆலம், செப் 24- ஆண்டு இறுதியில் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படும் வெள்ளப் பேரிடரின் போது உதவிகளை வழங்குவதற்கு சிலாங்கூர் மாநில கெஅடிலான் தன்னார்வலர் குழு முழு தயார் நிலையில் உள்ளது.
அரசு துறைகள் மற்றும் ஊராட்சி மன்றங்களின் சுமையைக் குறைப்பதற்கு எதுவாக மாநிலத்திலுள்ள 22 தொகுதிகளிலும் உள்ள உறுப்பினர்கள் முழு தயார் நிலையில் வைக்கப்படுவர் என்று அக்கட்சியின் தொடர்பு பிரிவுத் தலைவர் அஸ்மிஸாம் ஜமான் ஹூரி கூறினார்.
தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியுள்ளவர்களுக்கு உணவு விநியோகம் செய்வது, வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளைச் சுத்தம் செய்வது போன்ற பணிகளில் இந்த தன்னார்வலர்கள் ஈடுபடுவர் என்று அவர் சொன்னார்.
வெள்ளத்தை எதிர்கொள்வதற்கு முன்கூட்டியே தயாராக வேண்டும் என்ற படிப்பினையை கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளம் நமக்கு ஏற்படுத்தியுள்ளது.
அது உண்மையில் வருத்தமளிக்கும் சம்பவம் என்பதோடு விரும்பத்தகாத சூழ்நிலை குறிப்பாக, வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை நிவாரண மையங்களுக்கு கொண்டுச் செல்வது மற்றும் வெள்ளத்திற்கு பிந்தைய உதவிகளை வழங்குவதில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைப்பதில் முறையான முன்னேற்பாடுகள் செய்யப்பட வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்தியுள்ளது என்றார் அவர்.
வெள்ளத்தை எதிர்கொள்வதற்கு ஏதுவாக படகுகள், உபகரணங்கள் மற்றும் மீட்பு பணியாளர்களை தயார் படுத்துவதற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியின் அறிவிப்பை தாம் வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வெள்ளப் பேரிடர் தொடர்பான செயல்முறைப் பயிற்சி அடுத்த வாரம் தொடங்கி இரு தினங்களுக்கு நடத்தப்படும் என அவர் அமிருடின் கூறியிருந்தார்.